top of page

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி ? சிறுநீரகம் ஆரோக்கியம் அடைய வழிமுறைகள்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jul 27, 2025
  • 3 min read

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி ? சிறுநீரகம் ஆரோக்கியம் அடைய வழிமுறைகள்.

சிறுநீரகங்கள் (kidneys) என்பவை நமது உடலின் முதுகெலும்புகளின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும்.


இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. முதிருயிரிகளில் இது 11 செமீ நீளம் கொண்டுள்ளது. இவை குருதியை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள்வழியாகப் பெறுகின்றன, இவற்றில் இருந்து குருதி ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.


சிறுநீரகக் கோளாறு என்பது நமக்கு ஒரே நாளில் வந்துவிடும் பிரச்சினை இல்லை. அது நாள்பட்ட பிரச்சினை, சிறுநீரகத்தின் வேலை என்னவென்றால் உடலின் திரவக் கழிவுகளை வெளியேற்றுவது தான்,

அதோடு உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கும், இதுபோன்று ஏராளமான வேலைகளைச் செய்யும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை நாம் பராமரிக்காமல் போகும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

அந்த செயலிழப்பு ஏற்படுவதற்கு முன் ஒரு சில அறிகுறிகள் ஏற்படும்,


நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் சிறுநீரகத்தின் பங்கு மிக முக்கியமானது. உடலில் உள்ள திரவக் கழிவுகளை நீக்குவது மட்டுமின்றி ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி என பல வேலைகளைச் செய்கிறது. இந்த பணிகளில் தொய்வு ஏற்படும்போது உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதை ஆரம்ப காலத்திலேயே புரிந்து கொண்டால் ஆபத்தைத் தவிர்க்கலாம்.


கவனிக்காமல் விடும்போது நாள்பட்ட சிறுநீரக நோயாக மாறிவிடுகிறது. அது நாளடைவில் சிறுநீரகத்தை சேத மடைய வழிவகுக்கிறது. அப்படி உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை இங்கு பார்ப்போம்.

எப்போதும் பலவீனமாக, சோர்வாக இருப்பது

சிறுநீரகத்தின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும்போது, சேதம் உண்டாகும்போது அது வெளியேற்றப்படாமல் விடும் கழிவுகள் ரத்தத்தில் நச்சுக்களாக குவியத் தொடங்கும். இது உடலின் ஆற்றலை பாதிக்கும்.

அதேபோல ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை தூண்டுவதற்கு எரித்ரோபெய்டின் என்னும் ஹார்மோன் அவசியம். அந்த ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்போதும் ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினை உண்டாகும்.


இவற்றின் காரணமாகவும் உடல் எப்போதும் பலவீனமாகவும் அதிக சோர்வுடனும் இருக்கும். சாதாரண வேலைப்பளு தான் சோர்வுக்கு காரணம் என்று இருக்க வேண்டாம்,

சிறுநீர் கழிக்கும்போது வெளிப்படும் அறிகுறிகள்

நம்முடைய உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றும் ஒரு முறை சிறுநீர் கழித்தல். இந்த சிறுநீர் கழிக்கும்போது உங்களுடைய வழக்கத்தில் இருந்து ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் அது சிறுநீரகப் பிரச்சினைக்கான எச்சரிக்கை குறியீடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,


சிறுநீர் கழிக்கும் வேகம், சிறுநீரின் நிறம், நுரையாக வருவது என ஏதேனும் மாறுதல் தென்பட்டால் உடனே சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்ய வேண்டும்,


பாதங்கள் மற்றும் முக வீக்கம்

சிறுநீரகக் கோளாறுகள் இருக்கும்போது உடலில் இருக்கும் திரவக் கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படாமல் போகும். அதனால் உடலில் ஆங்காங்கே திரவம் கோர்த்து வீக்கம் ஏற்படும். இதை எடிமா என்பார்கள்.

குறிப்பாக சிறுநீரகப் பிரச்சினைகளால் ஏற்படும் வீக்கங்கள் காலின் கணுக்கால் பகுதி, பாதங்கள் மற்றும் முகங்களில் தான் அதிகமாக வீக்கம் ஏற்படும்.


இதேபோல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,


தோல் அரிப்பு மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

சிறுநீரகக் கோளாறின் முக்கிய அறிகுறி தோலில் தான் வெளிப்படும். சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கும் கூட சரும அரிப்பு உண்டாகும். ஆனால் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கூடுதலாக இருக்கலாம்.


ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் ஏற்றத்தாழ்வுகளால் இது உண்டாகிறது.


தோல் சொரி சொரியாக இருப்பது, தோல் உரிதல் பிரச்சினை ஆகியவை ஏற்படும்.


பசியின்மை,

சிறுநீரக செயல்திறன் குறைந்து கொண்டே போகும்போது உண்டாகும் அறிகுறிகளில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி வாயில் நச்சுக்கள் சேர்ந்து ஏதோ மெட்டல் வாசனை வீசுவது போல் இருக்கும்.


வாய் துர்நாற்றம், பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவை சேர்ந்து வந்தால் அது சிறுநீரகப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.


ஆனால் இதை வெறும் செரிமானக் கோளாறு என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது இரைப்பை மற்றும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பிரச்சினையாக இருக்கலாம்.


சிறுநீரகத்தை எப்படி பாதுகாக்கலாம்,


சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால் அதற்கு உணவு பழக்கம் ரொம்ப முக்கியம்.


சிறுநீரகப் பிரச்சினை இருப்பது தெரிய வந்தால் உங்களுடைய டயட்டில் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது புரத உணவு அளவுகளைக் குறைத்துக் கொண்டு நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உப்பின் அளவைக் குறைத்து கட்டுப்படுத்த வேண்டும்.


ஆப்பிள், பேரிக்காய், அண்ணாச்சி பழம், பெர்ரி வகை பழங்கள், தர்பூசணி , பப்பாளி, இலை வடிவ காய்கறிகள், பூசணிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய், குடைமிளகாய், காலிபிளவர், சுண்டைக்காய், புடலங்காய், இஞ்சி, முட்டைக்கோஸ், காளான் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வருத்த உணவு வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோழிக்கறி (சிக்கன்) ஆகியவற்றை மிதமான அளவில் எடுத்து கொள்ள வேண்டும், பால் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது, ஈரல் போன்ற உள்ளுறுப்பு இறைச்சிகளை தவிர்ப்பது நல்லது.


சிறுநீரகத்தை வளப்படுத்தும் உடற்பயிற்சிகள்,

உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்கு தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம்.

நடைப்பயிற்சி, யோகாசனங்கள், உள்ளிட்ட கடினமில்லாத மென்மையான பயிற்சிகளை செய்தாலே போதுமானது.


தினமும் நடைப்பயிற்சி செய்தாலே ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். இந்த இரண்டுமே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.


அர்த்த மத்ஸ்யேந்திராசனம் , புஜங்காசனம் (கோப்ரா போஸ்) ஆகிய யோகா ஆசனங்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் ஆசனங்கள் ஆகும்.


சிறுநீரக நோய்களை தடுக்க,

சிறுநீரக நோய்கள் வராமல் இருக்க இளம் வயதில் இருந்தே அவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.


குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீரகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.


இரத்த அழுத்தத்தை (<130/80 MM Hg) என்கிற அளவில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.


தினமும் குறைந்தபட்சம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.


மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் சிறுநீரகம் மிகக் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.


எதற்கெடுத்தாலும் மருந்துகள் (தேவையில்லால் வலி நிவாரணிகள்), எல்லாவற்றுக்கும் சப்ளிமெண்ட்டுகள் என்று எடுப்பதை நிறுத்த வேண்டும்.


மேற்கண்ட அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தும்போது கொஞ்சம் கவனமாக மேலே சொன்ன ஆரோக்கிய மாற்றங்களைக் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.


( மருத்துவரின் ஆலோசனைப்படி தயாரித்த செய்தி )


செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page